
தாய் ஏசியதால் மன விரக்தியில் விஷம் அருந்தி உயிரிழந்த யாழ். இளைஞன்
யாழில் தாயார் ஏசியதால் மன விரக்தியடைந்த இளைஞரொருவர் விஷம் அருந்தி தவறான முடிவு எடுத்துள்ளார்.
இதில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த குகதாஸ் தினேஷ் (வயது 18) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் மத்திப் பகுதியில் வசித்து வரும் குறித்த இளைஞன் கடந்த 12ஆம் திகதி போதைப் பொருளுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் பிணையில் சென்றுள்ளார்.
இந்த நிலையில் வேலைக்கு தொடர்ச்சியாக இளைஞன் செல்லாமல் இருந்ததால் தாயார் இளைஞனை பேசியுள்ளார்.இதனால் விரக்தி அடைந்த குறித்த இளைஞன் வீட்டை விட்டு கடந்த 13 ஆம் திகதி வெளியேறியுள்ளார்.
வீட்டை விட்டு வெளியேறிய இளைஞன் வீட்டுக்கு அருகில் உள்ள வாழை தோட்டத்தில் வைத்து விஷமருந்தி தவறான முடிவெடுத்துள்ளார்.
உடனடியாக கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.