பளை பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்களை பல மணி நேரம் காக்கவைத்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ள வைத்தியர்!

பளை பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்களை பல மணி நேரம் காக்கவைத்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ள வைத்தியர்!

பளை பிரதேச வைத்தியசாலைக்கு கடந்த 07 ஆம் திகதி உடல் சோர்வான நிலையில், குழந்தை பிறந்து 45 நாட்களான தாயார் ஒருவர் குழந்தையுடன் சென்றுள்ளார்.

கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் அவரை சோதித்த நிலையில் இரத்த பரிசோதனை செய்து வருமாறு கூறியுள்ளார்.

அதனையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அதற்கான முடிவுகள் இரண்டு நாட்களின் பின்னர் வெளிவரும் என கூறியுள்ளதுடன் மருந்தைப்பெற்றுச் செல்லுமாறும் கூறியுள்ளனர்.

அதனையடுத்து தாயார் வைத்தியசாலை மருந்தகத்திற்கு சென்ற நிலையில் அங்கு மருந்து வழங்குமிடத்தில் வழங்குனர் நீண்ட நேரமாக இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வைத்தியசாலை கடமையில் உள்ள ஊழியர்கள் உட்பட வைத்தியர் அனைவரும் வைத்தியசாலையின் மேல்மாடியில் சக ஊழியரின் பிறந்த தின கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்ததாக அங்கு நின்றவர்களால் தெரிவிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் பல நோயாளர்கள் பல மணி நேரம் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த தாயாரின் கணவர் வைத்தியரை சந்திக்க கோரியுள்ள நிலையில் மேலே செல்வதற்கு அனுமதி இல்லை என பாதுகாப்பு உத்தியோகத்தர் கூறியுள்ளார். இதையடுத்து அவர் வைத்தியரை கீழே வரச் சொல்லுமாறு பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கூறியுள்ளார்.

பாதுகாப்பு உத்தியோகத்தர் சென்று வைத்தியரிடம் கூறிய போது, அதற்கு பதிலளித்த வைத்தியர், அந்த பெண்ணின் கணவரை வெளியில் பிடித்து விடும்படியும் இல்லாவிடில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்து வெளியேற்றும்படியும் காவலாளியிடம் கூறியுள்ளார்.

அதன் பின்னர் அந்த தாயாரும் கணவரும் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து வைத்தியரின் வருகையை உறுதிபடுத்திய பின்னர் மருந்து சிட்டையை கொண்டு மருந்தெடுப்பதற்காக அந்த குடும்பத்தார் வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளனர்.

இதையடுத்து அங்கு மீண்டும் வருகை தந்த அந்த குடும்பத்தாருடன் வைத்தியர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன் போது இரத்த பரிசோதனை எடுக்கப்படாததால் தான், அந்த தாயாரின் கணவர் வாதாடியதாக வைத்தியர் கூறியுள்ளார்.

இதன் போது அந்த கணவர் ஒரு ஊடகவியலாளர் என்பதை அறிந்த வைத்தியர் அவரை அந்த வைத்தியசாலையில் உள்ள பெண்களை காணொளி பதிவு செய்வதற்காக வந்தீர்களா என்று அவதூறாக பேசியுள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்திருந்த போக்குவரத்து பொலிஸாரிடம் வைத்தியசாலையிலுள்ள தாதியார்களையும் தன்னையும் ஊடகவியலாளர் அச்சுறுத்தியதாக வைத்தியர் உண்மைக்கு புறம்பான தகவலைக் கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்த ஊடகவியலாளரின் ஊடக அடையாள அட்டையை பொலிஸார் பரிசோதித்ததன் பின்னர் மீண்டும் அடையாள அட்டையை அவரிடம் கொடுத்து விட்டு சென்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களிடம் வரும் நோயாளர்கள் அவர்களது வேலைகளை விட்டு பிள்ளைகளை வேறு வீடுகளில் விட்டும் எத்தனையோ சிரமத்தின் மத்தியில் வரும் நிலையில் அவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் சில வைத்தியர்கள் நடந்து கொள்வதாக அந்த ஊடகவியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.