
எம்மைக்காப்பாற்ற யாருமே இல்லையா? யாழில் போராட்டத்தில் மக்கள்!
யாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மிகவும் தாழ் நிலப் பிரதேசமான வசந்தபுரம் பொம்மை வெளி மக்கள் மழை காலத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு தற்பொழுது வீடு எதுவும் இல்லை. அரசாங்க அதிகாரிகளால் பழைய வீட்டினை அழித்து புதிய வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் இந்த அரசாங்கத்தினால் வீட்டுத் திட்டத்திற்கான படங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அரச அதிகாரிகளினால் அப்பகுதியில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் போது தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படும் எனக் கூறி பழைய வீட்டை இடித்து புதிய வீட்டுத் திட்டத்திற்கு தயாராகுமாறு கூறி இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இதுவரை குறித்த பிரதேச மக்களுக்கு வீட்டுத் திட்டம் எதுவும் வழங்கப்படவில்லை. அத்துடன் அரச அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் நடந்து கொள்வதாகவும் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் கூறினார்.
குறிப்பாக இந்த பிரதேசத்தில் 92 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் பிரதேச மக்கள் தற்போது மழை காலம் நெருங்குவதால் தங்களுக்கான வீட்டுத் திட்டத்தினை துரிதப்படுத்தி தாங்கள் வசிப்பதற்கு ஒரு வீட்டினை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.