இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையிலான மோதலில் பலியாகியுள்ள இந்திய படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு
லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையிலான மோதலில் பலியாகியுள்ள இந்திய படையினரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா - சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்தது.
இந்தத் தாக்குதலில் கேர்ணல் ஒருவரும்இ இரண்டு சிப்பாய்களும் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் முன்னர் தெரிவித்திருந்தன. இந்தநிலையில் குறித்த மோதலில் படுகாயமடைந்த மேலும் 17 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அத்துடன் சீன தரப்பில் உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்த வீரர்களின் மொத்த எண்ணிக்கை 43 என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் கவலை வெளியிட்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இந்தியா மற்றும் சீனாவும்; அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் ஆறுதல் தரும் நிகழ்வுகளாக எடுத்துக்கொள்வதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.