தமிழன் என்பதால் பெருமை -பிரபல இசையமைப்பாளர் நெகிழ்ச்சி

தமிழன் என்பதால் பெருமை -பிரபல இசையமைப்பாளர் நெகிழ்ச்சி

தமிழன் என்பதால் பெருமையும் பேருவகையும் அடைவதாக தமிழகத்தின் முன்னணி இசையமைப்பாளர் டி இமான் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருக்கும் தமிழ் இருக்கைக்கான தூதராக, இசையமைப்பாளர் டி.இமான் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

“உலகின் தொன்மையான மொழி எனப் போற்றப்படும் தமிழ், ‘வாய் வழித் தொடர்பு மொழி’ என்பதைத் தாண்டி, மனித குலத்தின் வாழ்வியல், நாகரிகம் மற்றும் கலாசாரங்களை தன் இலக்கியங்களில் உள்ளடக்கிய மொழியாகும். ‘மொழிகளின் தாய்’ என தமிழ் புகழப்படுவது குறித்து தமிழன் என்ற முறையில், நான் பெருமையும் பேருவகையும் கொள்கிறேன்.

பல்வேறு கலை வடிவங்கள் மூலம் மொழிக்கு செழுமை ஏற்றிய மிகச் சிறந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது தமிழ் நிலம். ரொறன்ரோ பல்கலைகழகத்தின் தமிழ் இருக்கையின் தூதராக நான் நியமிக்கப்பட்டபோது, இவற்றையெல்லாம் அறிந்து மிகவும் ஆச்சரியமடைந்தேன்.

கனடாவின் முதல் தர பல்கலைக் கழகமான ரொறன்றோவில் எமது தாய்மொழிக்கு இருக்கை அமைத்து அங்கீகரித்தது, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கெல்லாம் உவகை தரும் பெருமைமிகு தருணம்.

ரொறன்றோ பல்கலைக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் நன்றி செலுத்தும் இந்த நேரத்தில், எமக்கு அளிக்கப்பட்ட இந்த கெளரவம், தாய் மொழி மீது நான் கொண்ட ஈடுபாட்டை இன்னும் மேம்படுத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.