கால எல்லை நீடிப்பு! மாணவர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி தகவல்

கால எல்லை நீடிப்பு! மாணவர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி தகவல்

2019ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான மீளாய்வு செய்யும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறித்த மீளாய்வுக்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 17ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் டிசம்பர் 2ஆம் திகதி முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து, பரீட்சைப் பெறுபேறுகளை கடந்த மார்ச் மாதம் இறுதிப்பகுதியில் வெளியிடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த நடவடிக்கைகள் பிற்போடப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெறுபேற்றிற்கான மீளாய்வு செய்ய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவது வழமை. அதற்கான சூழல் நாட்டில் காணப்படவில்லை. அதன் காரணமாகவே இந்த காலநீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்றை தினம் திறக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.