
சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் செயற்படுவதனால் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும் - உபுல் ரோஹன
உலக நாடுகளை போல இலங்கையிலும் தற்போது கொவிட் பரவல் அதிகரித்து வருவதனால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டில் உள்ள அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனப் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவல் நிலமை தொடர்பில் எமது செய்தி பிரிவு அவரிடன் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்சமயம் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பலர் சுகாதார வழிகாட்டல்களைப் புறக்கணித்து செயற்படுகின்றனர்.
வார இறுதியில் வரவுள்ள நீண்ட விடுமுறையின் போது முறையான சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறு சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் செயற்படுபவதனால் நாட்டை மீண்டும் முடக்கும் நிலை ஏற்படும் எனவும் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இதற்கிடையில், இலங்கையில் பீ.1.617.2.104 என்ற மற்றுமொரு டெல்டா உப வைரஸ் திரிபான டெல்டா உப பரம்பரை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் பீ.1.617.2.28 என்ற டெல்டா உப வைரஸ் திரிபு நாட்டில் அடையாளம் காணப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது மற்றுமொரு டெல்டா உப வைரஸ் திரிபான டெல்டா உப பரம்பரை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.