
யாழில் பாரிய விபத்து! அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!!
சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பேருந்தின் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.
இன்று இரவு 7 மணியளவில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து புத்தூர் சந்தி பகுதியில் உள்ள பேருந்து பயணிகள் தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இவ்விபத்தினால் பயணிகள் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படாத போதும் பேருந்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக பேருந்தில் முன் இருக்கையில் பயணித்த பயணிகள் தெரிவிக்கையில், விபத்து இடம்பெறுவதற்கு சற்றுமுன்னர் திடீரென பேருந்தின் பிரேக் மற்றும் ஸ்ரேறிங் இயங்கவில்லை என சாரதி தெரிவித்த சில விநாடிகளில் விபத்து இடம்பெற்றதாக குறிப்பிட்டனர்.
இவ்விபத்தின் போது யாழ்ப்பாணத்தில் இருந்த சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மற்றும் டிப்பர் வாகனங்களும் சிறிதளவு சேதமடைந்துள்ளதோடு 50 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான பயணிகள் தரிப்பிடம் முற்றாக இடிந்து விழுந்துள்ளது.
விபத்து தொடர்பாக சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மையில், யாழ்ப்பாணத்தில் வைத்து வழங்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான புதிய பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.