
இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் வெற்றிடமாகவுள்ள, மூன்று வேலைப் பிரிவுகளுக்கான பதிவு இன்று(27) அதிகார பூர்வமாக ஆரம்பமாகும் என்று இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.
இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி திகதி, 2025 ஜூலை முதலாம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியகத்தின் தகவல்படி, இஸ்ரேலின் கட்டுமானத் துறையின் கீழ் புனரமைப்பு துணைத் துறையில் தகுதிவாய்ந்த இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொது புதுப்பித்தல் வேலை(General Renovation Work) பீங்கான் டைலிங் வேலை(Ceramic Tiling Work) பிளாஸ்டரிங் வேலை (Plastering Work ) என்பவற்றுக்கே விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இந்தத் தொழில்களில் பொருத்தமான அனுபவமுள்ள 25 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் முன்னர் இஸ்ரேலில் பணிபுரிந்திருக்கக்கூடாது அல்லது அங்கு உறவினர்கள் இருக்கக்கூடாது.
அத்துடன் அனைத்து நாடுகளுக்குமான, குறைந்தது மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் கடவுச் சீட்டை வைத்திருக்க வேண்டும்.
கூடுதலாக, இந்த வேலை வகைகளில் முன்னர் இறுதி திறன் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு 63 மாத வேலைவாய்ப்பு ஒப்பந்த அடிப்படையில், மாத சம்பளம் 1,520 அமெரிக்க டொலர்கள் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவுகளுடன் வழங்கப்படும்.