
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கு, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் (U.S. Embassy Colombo) எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக, குழந்தை பிரசவிக்கும் நோககத்துடன் சுற்றுலா விசாக்களில் அமெரிக்காவுக்கு பயணம் செய்பவர்களுக்கு எதிர்காலத்தில் விசாக்கள் மறுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நோக்கத்துக்காக அமெரிக்கா செல்லும் பயணிகள் பெரும்பாலும் அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் மருத்துவ உதவியை நம்பியிருப்பதாகவும், இது அமெரிக்க வரி செலுத்துவோர் மீது நிதிச் சுமையை சுமத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, விண்ணப்பதார் ஒருவரின் முதன்மை நோக்கம் குடியுரிமை சலுகைகளுக்காக பிரசவம் என்று நம்பினால், சுற்றுலா விசாக்களை நிராகரிக்குமாறு, தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.