
நான்கு வருடங்களுக்குள் விடுதலையான மரண தண்டனைக் கைதி! ஆச்சரியமான தகவல் அம்பலம்
முன்னாள் அமைச்சர் ஒருவரின் மனைவியொருக்கு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு வருடங்களுக்குள்ளாக அவர் சிறையில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்.
மேற்குறித்த ஆச்சரியமிக்க தகவலை சட்ட மா அதிபர் திணைக்களம் நேற்றையதினம்(26) கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பைப் பயன்படுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து முறைகேடான வழியில் சிறைக் கைதியொருவர் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்ட மா அதிபர் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி மரிய ஜுலியா மொனிகா பெர்னாண்டோ என்பவர் இரண்டு பெண்களை கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொன்ற சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கடந்த 2005ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், 2009ஆம் ஆண்டு மகளிர் தினத்தின்போது அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனைப் போன்று இன்னும் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.