
மாவைக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி! தொண்டர்கள் விடாப்பிடி
நடந்து முடிந்த தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தற்காலிக பின்னடைவை அடைந்திருப்பதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாக 1994ஆம் ஆண்டு இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் வடக்கு, கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 2 ஆசனங்களோடு நாடாளுமன்றம் சென்று போதும் ஏனைய மாவட்டங்களில் கட்சி ஆசனங்களை பெறவில்லை என கட்டுரையாளர் வர்மன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது கட்டுரையில் மேலும்,
அதன் பின்னர் ஊடகவியலாளர்களால் எடுக்கப்பட்ட முன்னெடுப்பின் பலாபலனாகவே 22 ஆசனங்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் காலத்தில் விடுதலைப் புலிகளின் ஒரு அரசியல் அணியாக நாடாளுமன்றத்தில் 22 ஆசனங்களோடு சென்றது.
அதன் பின்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான எழுச்சியில் மாற்றம் இருக்கவில்லை. ஆனால் இவ்வருடம் வழமைக்கு மாறாக பாரிய பின்னடைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திருக்கின்றமையில் பல்வேறுபட்ட காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன.
முதலாவதாக நல்லாட்சிக் காலத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்த தவறியமை என்பதை விட நல்லாட்சி அரசுடனான டீல்கள் அனைத்தையும் கூட்டமைப்பின் ஒருவர் மட்டும் கையாண்டதுடன், ஏனையவர்களை தங்களுடைய மாவட்டங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய விடாமை. அது மட்டுமல்லாது கிடைத்த ஒரு வாய்ப்பை குறித்த நபர் பயன்படுத்த அனுமதியாமை.
இரண்டாவது கட்சித் தலைமை மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கக்கூடிய இன்றைய சூழலில் கட்சித் தலைமையின் பல முடிவுகளை தாமாகவே எடுத்து செயற்படுத்தியமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அது மட்டுமல்லாது குறித்த கட்சியில் இருவர் விடுதலைப் புலிகளையும், விடுதலைப் புலிகளின் ஆளுமை நிறைந்த மனிதர்களையும் பொருத்தமில்லாத ஒப்பீடு, பொருத்தமில்லாத விமர்சனம் செய்தமை தமிழர்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதன் விளைவாக கட்சி என்றும் இல்லாத அளவு பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு பிரதான காரணம் தலைமை என்பதை விட அதிலிருந்த இருவரின் முன்னுக்குப் பின் முரணான, விடுதலைப் போராட்டம் தொடர்பான கருத்துக்களே காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
தலைமை மீது நடவடிக்கை எடுக்கப்போகிறோம், தலைமையை மாற்றப் போகிறோம் என்கின்ற கோசமெல்லாம் ஒரு உள்நோக்கம் உடையதாகவே பார்க்கப்படுகிறது.
இத்தேர்தலுக்கு முதலே செயலாளரொருவரை திருகோணமலையில் தெரிவு செய்வதென்பது யாழ். மாவட்ட தேர்தலில் வெற்றியீட்டிய இருவரினதும் (ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஒருவர் தமிழரசுக் கட்சியின் தலைவர்) நிகழ்ச்சி நிரல்.
அதனடிப்படையில் தற்காலிக பின்னடைவை கண்டிருக்க கூடிய இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோசம் கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழரசுக் கட்சி தொண்டர்களால் பலமாக முன்வைக்கப்டுகின்ற கோரிக்கை.
தேர்தல் முடிவு வெளியான நள்ளிரவு முதல் இன்று வரை மாவட்டபுரத்தில் இருக்க கூடிய தமிழரசு கட்சியின் தலைவர் வீட்டில் தொண்டர்கள் நிறைந்த வண்ணமாகவே உள்ளனர். தலைமை இதனை விரும்பாவிட்டாலும் தொண்டர்கள் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றார்கள் தேசிய பட்டியலை பெறவேண்டுமென .
இதற்கிடையில் யாழ். மாவட்டத்தில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரு வேட்பாளர்கள் மாவை சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் தேர்தலுக்கு முன்னரான தமது நிகழ்ச்சி நிரல் தவிடுபொடியாகிவிடும் என்பதற்காக தாம் சார்ந்த ஒருவரை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதில் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றனர்.
இதில் கொழும்பு உட்பட வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து மாவட்ட கிளைகளிலும் எதிர்ப்பாகவும், தமிழரசு கட்சி தலைவரே தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து வலுவடைய ஆரம்பித்திருக்கிறது.
இவ்வாறான சூழலில் கட்சித் தலைமை மிக இருக்கமானதொரு முடிவை கட்சிப் பிளவுப்படும் என்பதற்கு அப்பால் தமிழ் மக்கள் சார்ந்து விரைந்து எடுக்கக்கூடிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது.
கட்சிக்குள் பிளவு வரலாம், பின்னடைவு வரலாம் என்று நினைத்தால் தந்தை செல்வா கூறிய கூற்று இங்கே யதார்த்தமாகிவிடும். (தமிழரை கடவுளும் காப்பாற்ற முடியாது) இவ்வாறான சூழ்நிலையில் இந்தியாவில் கூட பல கட்சித்தலைவர்கள் படுதோல்விகளையெல்லாம் தழுவியும் கூட இன்று கட்சி பலமாகவும் தலைமை திடமாகவும் இருக்கிறது என்றால் அவர்கள் எடுத்த முடிவுகளே காரணம்.
அதேபோன்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தமிழ் இனத்திற்காக விரைந்து மேற்குறிப்பிட்ட தொண்டர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களின் முடிவுகளை ஏற்று கட்சியை வெகு விரைவாக தமிழ்த் தேசியம் ஊற்றெடுக்கும் இடத்தை சுத்தம் செய்தே ஆக வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது.
அப்படி இல்லாதுவிட்டால் வரலாறே தெரியாமல் 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் வந்தவர்கள் கட்சியை வழி நடத்த விளைவார்களாக இருந்தால் வடக்கு,கிழக்கில் யாழ். மாவட்டத்தில் மட்டும் இரண்டு நாடாளுமன்ற ஆசனங்கள் பெறப்படுவதை யாரும் தவிர்க்க முடியாது.
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரையோ, கட்சியின் பொறுப்புக்களையோ எந்த தருணத்திலும் விட்டுக் கொடுக்க கூடாது என மாவட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வரை அனைவரும் விடாப்பிடியாக உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.