தாயை கொடூரமாக தாக்கிய மகன் - அண்ணனை தாக்கிய தம்பி
பலங்கொட, மஸ்ஸென்ன பகுதியில் தனது தாயை தடியால் தாக்கிய மூத்த மகனை, ஆத்திரமடைந்த தம்பி திருப்பித் தாக்கியதில் தாய் மற்றும் மகன் ஆகிய இருவருமே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 52 வயதான சுசீலா ரஞ்சனி என்ற தாய், தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
கடுமையான காயம் காரணமாக அவர் பலங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தாய்க்கும் அவரது மூத்த மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், மகன் தனது தாயை தடியால் தாக்கியுள்ளார்.

இதில் தாய் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். தாய் தாக்கப்படுவதைக் கண்டு ஆத்திரமடைந்த அவரது இளைய மகன், தனது அண்ணனைத் திருப்பித் தாக்கியுள்ளார்.
இதில் மூத்த மகனும் காயமடைந்து அதே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.