கொழும்பில் காணி விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

கொழும்பில் காணி விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் புறநகர்ப் பகுதிகளில் காணி விலைகள் மிக அதிக வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Lanka Property Web நிறுவனம் வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த காணி விலைச் சுட்டெண்ணிற்கமைய, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டில் கொழும்பு 1 முதல் 15 வரையிலான மாநகர எல்லைக்குள் ஒரு பேர்ச் காணியின் சராசரி விலை 4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதற்கமைய, 12 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. இதேவேளை, கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் ஒரு பேர்ச் காணியின் சராசரி விலை 8 சதவீதத்தினால் அதிகரித்து 2.3 மில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

கொழும்பில் காணி விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் | Colombo Land Prices Increased

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் காணி விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் ஒரு பேர்ச் காணியின் சராசரி விலை 15 சதவீதத்தினால் உயர்ந்து 769,097 ரூபாவாக பதிவாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் 10 சதவீதத்தினால் அதிகரித்து 486,396 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

தற்போது கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் புறநகர் நகரங்களை நோக்கியே முதலீட்டாளர்கள் மற்றும் கொள்வனவாளர்களின் கவனம் அதிகளவில் ஈர்க்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் சில முக்கிய நகரங்களில் காணி விலைகள் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

கொழும்பில் காணி விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் | Colombo Land Prices Increased

கம்பஹா மாவட்டத்தின் யாக்கல, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம ஆகிய பகுதிகளில் ஒரு பேர்ச் காணியின் சராசரி விலை தலா 35 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

யாக்கலவில் ஒரு பேர்ச் காணி 831,015 ரூபாவாகவும், ஹோமாகமவில் 916,912 ரூபாவாகவும், நீர்கொழும்பில் 1,561,925 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும், கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பகுதியில் காணி விலை 30 சதவீதத்தினால் உயர்ந்து ஒரு பேர்ச் சராசரியாக 1,222,181 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன் கடுவலை, பன்னிபிட்டிய, மொரட்டுவ மற்றும் நுகேகொட ஆகிய நகரங்களில் கடந்த 2025ஆம் ஆண்டில் காணி விலைகள் 25 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக Lanka Property Web நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.