நெருங்கும் சாதாரண தரப் பரீட்சை! மேலதிக வகுப்புக்களுக்கு விதிக்கப்பட்டது தடை

நெருங்கும் சாதாரண தரப் பரீட்சை! மேலதிக வகுப்புக்களுக்கு விதிக்கப்பட்டது தடை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2025) நெருங்கும் நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை மேலதிக பயிற்சி வகுப்புகள் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, பரீட்சார்த்திகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துவது, பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், பட்டறைகள் நடத்துவது, பரீட்சைக்கான யூகக் கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகிப்பது, சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், வினத்தாள்களில் உள்ள கேள்விகள் அல்லது அதுபோன்ற கேள்விகள் வழங்கப்படும் என்று கூறும் மின்னணு அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்களை வெளியிடுவது அல்லது அத்தகையவற்றை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரோ, நிறுவனமோ அல்லது வேறு தரப்பினரோ இந்த விதிமுறைகளை மீறிச் செயல்பட்டால், அந்த நபர், நிறுவனம் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கும் சாதாரண தரப் பரீட்சை! மேலதிக வகுப்புக்களுக்கு விதிக்கப்பட்டது தடை | Tuition Ban For Ol Exam From 11Th Feb4

அதன்படி, குறித்த விதிமுறைகளை மீறுவோர் தொடர்பில் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது காவல் தலைமையகம் அல்லது இலங்கை பரீட்சைத் திணைக்களத்திடம் முறைப்பாடளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக 3,545 பரீட்சை மையங்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.