
இந்தியாவில் கொரோனா அதிவேகமாக பரவவில்லை : டாக்டர் மைக்கேல் ரையான்
இந்தியாவில் கொரோனா அதிவேகமாக பரவவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்டத்திற்கான தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெனீவா நகரில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவசரகால திட்டத்தின் தலைவர் டாக்டர் மைக்கேல் ரையான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தெற்கு ஆசியாவில், இந்தியாவில் மட்டுமல்லாது வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளிலும் மக்கள் அடர்த்தி அதிகமாக இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவவில்லை. ஆனால் அதற்கான ஆபத்து எப்போதும் இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று சமூகங்களில் காலடி எடுத்து வைப்பதால் அது எந்த நேரத்திலும் வேகம் எடுக்கலாம். இதை நாங்கள் பல அமைப்புகளில் கண்டிருக்கிறோம்.
இந்தியாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நிச்சயமாக பரவலைக்குறைப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தின. அதே நேரத்தில் இந்தியாவில் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை திறந்து இருக்கும் நிலையில் ஆபத்து எப்போதும் இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை, மக்கள் தொகை அடர்த்தி என்பன பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.