
காவல் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு - யாழில் சம்பவம்..!
யாழ்ப்பாணம் - பண்ணைக்கு முன்பாக உள்ள கடையொன்றின் உரிமையாளர் காவல்நிலைய வளாகத்தில் மயங்கி விழுந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடையின் உரிமையாளரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வரத்தினம் ஹரீந்திரன் என்பவருக்கும் இன்னொருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்காக யாழ். காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் அங்கு மயங்கி விழுந்துள்ளார்.
இதன்பின்னர் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.